ஆந்திர மாநிலம்: தெலுங்கு தேசம் கூட்டணியில் இணைந்தது பா.ஜனதா

அமராவதி,

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி மீண்டும், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது.

கடந்த தேர்தலின்போது, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. தேர்தலில் அந்த கட்சி தோல்வியடைந்தது.

இந்த முறை தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன்கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் இருகட்சிகளும் தேர்தலில் இணைந்து செயல்பட முடிவு செய்தது.

கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில், மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பது என்று சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். இதற்காக பா.ஜனதாவுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பா.ஜனதா-தெலுங்கு தேசம் கட்சிகளிடையே கூட்டணி உறுதியானது.

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் பா.ஜனதா கட்சிக்கு 10 சட்டசபை தொகுதிகளும், 6 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதேபோல் ஜனசேனா கட்சிக்கு 21 சட்டசபை தொகுதிகளும், 2 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 144 சட்டமன்ற தொகுதிகளிலும், 17 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் போட்டியிடுகிறது.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தள பதிவில், அமராவதியில், தெலுங்கு தேசம், பா.ஜனதா, ஜனசேனா ஆகியவை இணைந்து ஒரு வலிமையான தொகுதிப் பகிர்வு சூத்திரத்தை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் மீது ஆந்திர மக்கள் தங்கள் ஆசிகளைப் பொழிந்து, அவர்களுக்குச் சேவை செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை எங்களுக்கு வழங்குமாறு அழைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.