எல்லீஸ் பெர்ரி அபாரம்: மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல்

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

முடிவில் மும்பை அணி 19 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக மும்பை அணியில் சஜீவன் சஜனா 30 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் களமிறங்கிய சோபி மோலினெக்ஸ் 9 ரன்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 11 ரன்களும், அடுத்து களமிறக்கிய டிவைன் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து ஜோடி சேர்ந்த எல்லீஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஸ் இணை, தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். முடிவில் பெங்களூரு அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. பெங்களுரு அணியின் சார்பில் அதிகபட்சமாக எல்லீஸ் பெர்ரி 40 ரன்களும், ரிச்சா கோஸ் 36 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இதனிடையே டெல்லி மற்றும் மும்பை அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டநிலையில், இன்றைய வெற்றியின் மூலம் பெங்களூரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.