CSK vs RCB Highlights: 17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, கடந்த முறை 5ஆவது இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சந்தித்தது. டாஸ் வென்ற பெங்களூரு அணிக்கு பாஃப் டூ பிளெசிஸ் தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்டர்கள் கடுமையாக சொதப்பினர்.
விராட் கோலி, கேம்ரூன் கிரீன் களத்தில் நீண்ட நேரம் நின்றாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அனுஜ் ராவத் – தினேஷ் கார்த்திக் ஜோடி 95 ரன்களை குவித்து 20 ஓவர்களில் ஆர்சிபி அணியை 173 ரன்களுக்கு இழுத்துச் சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மா 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பொறுமை காட்டிய தூபே
தொடர்ந்து 174 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் நிதான தொடக்கத்தை அளிக்க ரச்சின் ரவீந்திரா அதிரடி காட்டினார். கெய்க்வாட் 15 ரன்களில் ஆட்டமிழக்க பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். சில ஓவர்களிலேயே ரஹானே 27 ரன்களிலும், டேரில் மிட்செல் 22 ரன்களிலும் ஆட்டமிழக்க சிஎஸ்கே ரசிகர்களுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. குறிப்பாக தூபே மிகப் பொறுமையாக விளையாடிக்கொண்டிருந்தார்.
ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் துபேவிற்கு பவுண்சர் போட தொடங்கி அதையே ஜடேஜாவிற்கும் பின்பற்ற ரன் வந்துக்கொண்டே இருந்தது. கேம்ரூன் கிரீன், சிராஜ், அல்ஸாரி ஜோசப் என கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்கள் கசிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதியானது. 18.4 ஓவரிலேயே இலக்க அடைந்து 10 பந்துகள் மிச்சம் வைத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிரீன் 2 விக்கெட்டுகளையும், கரன் சர்மா, யாஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். முஸ்தபிசுர் ரஹ்மான் பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.
ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி, சென்னை அணியுடன் சேப்பாக்கத்தில் இத்துடன் 9 போட்டிகளில் மோதி 8இல் தோல்வியடைந்துள்ளது. 2008இல் தான் கடைசியாக ஆர்சிபி சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் வெற்றிக் கனியை ருசிக்காமல் இருந்த நிலையில், அது இம்முறையும் நிறைவேறவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஆர்சிபி அணியில் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் சுழற்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை என்பதால் சேப்பாக்கத்தில் அவர்களால் வெற்றியை குவிக்க முடியவில்லை.
சிஎஸ்கே அணியின் வெற்றி ரகசியமே மிடில் ஆர்டரில் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்தான். அதனை பாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி சரியாக செய்யவில்லை எனலாம். கரன் சர்மா – மயங்க் தாகர் – மேக்ஸ்வெல் ஆகியோர் அவர்களுக்கு பெரியதாக உதவவில்லை. எனவே, ஆர்சிபி அணி அதன் சுழற்பந்துவீச்சை இன்னும் மாற்றத்திற்கு உள்ளாக்க வேண்டும்.