படப்பிடிப்பில் இவானாவை திட்டினேன்: பாரதிராஜா

இயக்குனர் பாராதிராஜா தனது படங்களில் நடிக்கும் நடிகைகளை அடிப்பது, திட்டுவது ஒன்றும் புதிதில்லை. அவரிடம் அடி வாங்காத நடிகைகளே இல்லை என்பார்கள். அடி வாங்கியவர்களும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் “மோதிர கையால் குட்டுப்பட்டேன்” என்று பெருமையாக சொல்வார்கள்.

அவர் நடித்து முடித்துள்ள 'கள்வன்' என்ற படத்தில் ஜி.வி.பிரகாசும், இவானாவும் நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா “இந்த படத்தின் இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜிவி நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத்தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார்” என்றார்.

இதே விழாவில் இவானா பேசும்போது “'நாச்சியார்' படத்திற்குப் பிறகு ஜிவி பிரகாஷூடன் சேர்ந்து நடிக்கிறேன். அப்போது அவருடன் சரியாக நிறைய பேச முடியவில்லை. இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள். பாரதிராஜா சாருடன் நான் நடித்திருப்பது எனக்குப் பெருமை. இதயங்களை 'கள்வன்' நிச்சயம் திருடுவான்”. என்றார்.

இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க, பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார், பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க, ரேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.