“அரசியல், திரைத் துறைக்கு பேரிழப்பு” – ஆர்.எம்.வீரப்பனுக்கு செல்வப்பெருந்தகை புகழஞ்சலி

சென்னை: “ஆர்.எம்.வீரப்பன் மறைவு தமிழக அரசியலுக்கும், திரைத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திராவிட இயக்க மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார்.

பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றவர். மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் முதன்மை தளபதியாக விளங்கியவர். அரசியல், திரைப்படத்துறை, தமிழ்ப் பணி, ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் தமது ஈடுபாட்டின் மூலம் முத்திரை பதித்தவர்.

இலக்கிய ஆர்வத்தின் காரணமாக கம்பன் கழகத்தின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றி இணையற்ற இலக்கியப் பணியாற்றியவர். ஆர்.எம். வீரப்பன் மறைவு தமிழக அரசியலுக்கும், திரைத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகத்தினர் மற்றும் அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.