33 வருடங்களாகி விட்டதா… ஆச்சரியத்தில் குஷ்பு!

தமிழ் சினிமாவில் தாறுமாறாக ஓடி பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'சின்னத்தம்பி. பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பிரபு, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி வெளியான படம். இன்றுடன் இப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இளையராஜாவின் இசையில் இடம் பெற்ற இனிமையான பாடல்கள்தான் இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம். பிரபுவின் அப்பாவித்தனமான நடிப்பு, குஷ்புவின் அழகான நடிப்பு என அந்தக் காலத்தில் ஆரவார வெற்றியைப் பெற்ற படம். பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய காதல் திரைப்படம்.

இன்று இப்படத்தின் 33வது ஆண்டு நிறைவைடைந்துள்ளது. இது குறித்து குஷ்பு, “நேரம் பறக்கிறது என்று சொல்வார்கள், ஆம் அது உண்மைதான். தமிழக மக்களை புயலாய் தாக்கிய 'சின்னதம்பி' படம் வெளிவந்து 33 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை. எங்களது வாழ்க்கையை என்றென்றும் மாற்றிய படம். அந்த அன்பு, பாசம், மரியாதை ஆகியவற்றை என் மீது பொழிந்தனர். அது இன்று வரை தொடர்வது நம்ப முடியாத ஒன்று. உங்கள் ஒவ்வொருவர் மீதும் எப்போதும் பணிவாகவும், நன்றியுடனும் இருப்பேன். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

எனது அபிமானத்திற்குரிய இயக்குனர் பி.வாசு சார், எனது அபிமானத்துக்குரிய சக நடிகர் பிரபு சார், எப்போதும் எனக்கு ஸ்பெஷலானவர்கள். மறைந்த தயாரிப்பாளர் பாலு எப்போதும் நினைக்க வேண்டியவர். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், எனது சக நடிகர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு நன்றி.

மந்திரவாதி… இளையராஜா அவர்கள், அவரது பாடல்கள் காலத்திற்கும் நம்மை வேட்டையாட வைக்கும். சின்னதம்பி 33 வருடங்கள் நிறைவு. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி, தலைவணங்குகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.