அருண் விஜய்யின் 36வது திரைப்படத்திற்கு `ரெட்ட தல’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அத்திரைப்படத்தின் பெயர் ‘ரெட்டை தலை’ என்ற தகவல்களெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியிருந்தன. ஆனால் அது அப்போது நடக்கவில்லை.

தற்போது அருண் விஜய்யின் 36வது திரைப்படத்திற்கு அந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள். இப்படத்தை ‘மான் கராத்தே’ திரைப்படத்தின் இயக்குநர் கிறிஸ் திருக்குமரன் இயக்குகிறார். இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகாதஸிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் நடிகை சித்தி இத்னானி, தான்யா ரவிசந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் அருண் விஜய், “இந்தத் திரைப்படத்தோட கதை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. நான் எப்பவும் ஒரு பார்வையாளனாக உட்கார்ந்துதான் கதை கேட்பேன். அந்த நேரத்துல ஒரு பார்வையாளனாக என்னை அந்தக் கதை ஆச்சரியப்படுத்துச்சுனா அந்தப் படத்தைப் பண்ணுவேன். இந்தப் படத்துல ஒரு கூடுதல் ஸ்பெஷல் இருக்கு. ‘தடம்’ படத்துக்குப் பிறகு இதுல இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்கான தலைப்பைப் பற்றிப் பேசும்போது ‘ரெட்ட தல’ங்கிற டைட்டில் சொன்னாங்க. இயக்குநர் அந்த ரெண்டு கதாபாத்திரங்களையும் வித்தியாசமான முறையில எழுதியிருந்தார்.
இந்தக் கதைக்கு அந்த டைட்டில்தான் சரியாக இருக்கும்னு முடிவு பண்ணிட்டோம். இந்தப் படத்தை படத்தொகுப்பாளர் ஆண்டனி சார்தான் எடிட் பண்ணப்போறாரு. ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்துல நான் ஒடி வர்ற ஒரு காட்சியை இப்போ வரைக்கும் பலர் பாராட்டுறாங்க. அதுக்கு காரணம் எடிட்டர் ஆண்டனி சார்தான். அவர் டேபிள்லதான் அந்த மேஜிக் நடந்துச்சு.” என முடித்துக் கொண்டார்.
இதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த நடிகர் அருண் விஜய், “‘தல’ங்கிறது தமிழ்நாட்டுல ரொம்பவே பவர்ஃபுல்லான டைட்டில். இந்தத் திரைப்படத்தோட கதாபாத்திரத்துக்கு அப்படி ஒரு வலிமையான தலைப்பு தேவைப்பட்டுச்சு. இந்தத் திரைப்படத்தோட தலைப்பை 10 வருஷமாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வச்சிருந்தார்ன்னு சொன்னாங்க. எங்களுக்காக இந்தத் தலைப்பைக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிச்சுகிறேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு அஜித் சாருடைய ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. அவங்க மட்டுமில்ல பலரோட ரசிகர்களும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க.

அவங்க இல்லைன்னா நான் இன்னைக்கு இங்க இல்ல. நான் இங்க மக்களை மகிழ்விக்கிறதுக்காக இருக்கேன். ஒவ்வொரு படத்துலயும் புதுசா பல விஷயங்களைப் பண்ணனும்னு ஆசைப்படுறேன்” என்றார்.
மேலும் அஜித் குறித்தான கேள்விக்குப் பதிலளித்த நடிகர் அருண் விஜய், “இந்தப் படத்தோட பர்ஸ்ட் லுக்கை அஜித் சார் பார்த்திருந்தால் நிச்சயமாகப் பாராட்டுவாரு. இந்த டைட்டிலைப் பார்த்ததும் அவர் இதை பத்தி யோசிச்சிருப்பார்னு நினைக்கிறேன்” எனப் பேசினார்.