“தமிழகத்தில் கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு மூலக்காரணம் புதுச்சேரி” – காங். எம்.பி வைத்திலிங்கம்

புதுச்சேரி: நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்களிக்க வலியுறுத்தியும், இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை மாலை கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்றது.

இளைஞரணி தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: இந்தாண்டு வெளியான நீட் தேர்வு முடிவில் மிகப்பெரிய அளவில் முறைகேடு ஊழல் நடந்துள்ளது. பீகாரில் நீட் தேர்வு கேள்வி தாள்கள் கசிந்து ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனர்.

குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர். இப்படி நீட் தேர்வில் பலதரப்பட்ட ஊழல் நடந்துள்ளது. நீட் தேர்வு முகமை தான் இந்த ஊழல்களுக்கு முக்கிய காரணம். நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே நீட் தேர்வு முறைகேடு சம்மந்தமாக சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் எந்த தேர்வும் முறையாக நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கிறது.

மோடி ஆட்சியில் ஒட்டுமொத்தமாக அரசு நடத்தும் தேர்வுகள் மோசமாக கையாளப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்தது இல்லை. மோடி ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. பல கோடி கைமாறுகிறது.

கேள்வித் தாள்களுக்கு விலை பேசப்படுகிறது. ஆசிரியர்களே பதில் எழுதி கொடுத்து பல கோடி வாங்குகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இது சகஜமாக நடக்கிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிக்கை விட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் சென்டாக் மூலம் பிள்ளைகளை சேர்க்கின்றோம். இது காங்கிரஸ் ஆட்சியில் முறையாக நடைபெற்றது. ஆனால் தற்போது நீட் தேர்வை கொண்டு வந்து பிள்ளைகள் எல்லாம் பாதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீத மாநில அரசின் இடங்கள் போக மீதமுள்ள அனைத்து இடங்களும் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும். மத்திய அரசு தான் அதனை முடிவு செய்வார்கள். இப்படிப்பட்ட அவல நிலை, பிள்ளைகள் படிக்க முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுவாக வந்துள்ளது. என்றார்.

காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி பிரதேச தலைவர் வைத்திலிங்கம் எம்.பி பேசுகையில், நீட் தேர்வில் ஒரு கேள்வி தாளுக்கு ரூ.3 கோடி கொடுத்து உயர்ந்த அரசு கல்லூரியில் படிக்கின்றனர். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு இடம் அரசு கல்லூரிகளில் கிடைப்பது இல்லை. இதனால் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரியில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி கழிவுதான் விஷ வாயுவாக மாறி ரெட்டியார்பாளையம் பகுதியில் 3 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த கழிவை இதுவரை மருத்துவ கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தவில்லை. மக்களை பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. எதைப் பற்றியும் சிந்திக்கவும் அவர்கள் தயாராக இல்லை.

தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலர் இறந்தனர். அதற்கு மூல காரணம் புதுச்சேரி மாநிலம் தான். இங்குள்ள அரசு நிர்வாகம் தான். சாராயக் கடை புதுச்சேரியில் மட்டும் தான் இருக்கிறது. தமிழகத்தில் இல்லை. அதனால் இந்த சாராயக் கடைகளை புதுச்சேரியில் உடனடியாக மூட வேண்டும். நிறைய ரெஸ்டோ பார்கள் திறந்திருக்கும் போது எதற்கு? சாராயக் கடைகள்.

புதுச்சேரி குடிகாரர்கள் ஊர் என்றனர். ஆனால், இன்று விஷச்சாராய ஊர் என்கின்றனர். இங்கிருந்துதான் சாராயம் எடுத்துச் செல்லப்படுகிறது என்று தமிழக சட்டப்பேரவையிலேயே சொல்லப்படுகிறது. தமிழக முதல்வர் சொன்ன பதிலும் இதுதான்.

இதற்கு காரணம் இங்குள்ளவர்கள் செய்கின்ற ஊழல். இதற்கு பின்னால் பிரதமர் மோடி இருக்கின்றார். மக்களவை தேர்தலில் பண பலத்தை வைத்து தான் நின்றனர். ஆனால் மக்கள் அதனை ஏற்கவில்லை. இங்குள்ள மதுக்கடைகளின் வியாபார நேரத்தை குறைக்க வேண்டும்.

8 மணி நேரத்துக்கும் மேல் மதுக்கடையில் விற்பனைக் கூடாது என்பதை இந்த அரசு நிர்வாகம் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர், முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.