போபால்: மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் யாசகம் எடுப்பதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர். மேலும், யாராவது யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு யாசகம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் – போபாலில் உள்ள சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் உள்பட பொது இடங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்துவோர் அதிகளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் போதைப்பொருள் புழக்கத்துக்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போபால் மாவட்ட ஆட்சியர் கௌஷ்லேந்திர விக்ரம் சிங், திங்கள்கிழமை (பிப்.3) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்ஹிதா சட்டத்தின் 163 (2)-ஆவது பிரிவின்கீழ் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை மீறி, மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
போபாலின் கோலார் பகுதியில் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்துவோர் தங்கியிருப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள சமூக நலக்கூடத்தை அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மாவட்டம் ஏற்கெனவே யாசகம் எடுப்பதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.