திருவனந்தபுரம்: “சமூகத்தில் நடக்கும் வன்முறையில் சினிமாவுக்கும் பங்கு இருக்கலாம். ஆனால், அதுவே மூல காரணம் என சொல்லிவிட முடியாது” என மத்திய இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம், ‘சமூகத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களுக்கு சினிமாவின் பங்கு என்ன?’ என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “திரைப்படங்களில் வன்முறையைக் காட்டக் கூடாது அல்லது அதைக் குறைக்க வேண்டும் என்று சொல்வதைவிட, அதில் காட்டப்படுவது எதுவும் சமூகத்துக்கு நல்லதல்ல என்பதை புரிந்துகொள்வது அவசியமாகும். சமூகத்தில் நடக்கும் வன்முறையில் சினிமாவுக்கும் பங்கு இருக்கலாம். ஆனால் அதுவே சமூகத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு மூல காரணம் என சொல்லிவிட முடியாது” என்றார்.
பின்னர், கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டருக்கு அருகில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்து ஒரு பள்ளி மாணவர் இறந்ததைக் குறிப்பிட்டு “ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தேசத்துக்கு ஒரு சொத்து. அவர்களை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஆர்டிஎஸ்க் (RDX) மற்றும் மார்கோ (Marco) போன்ற மலையாளத்தில் வெளியான அதீத ஆக்ஷன் திரைப்படங்கள் மக்களை பெரிய அளவில், குறிப்பாக இளைஞர்களை வன்முறையில் ஈடுபட ஊக்குவிக்கின்றன என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.