விக்கெட் வீழ்த்திய பின் வித்தியாசமான கொண்டாட்டம்… லக்னோ வீரருக்கு அபராதம் விதிப்பு

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 69 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ப்ரப்சிம்ரன் சிங்குக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி பேட்டிங்கின் போது ப்ரியன்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை லக்னோவின் திக்வேஷ் ராதி கைப்பற்றினார். ப்ரியன்ஷ் ஆர்யா ஆட்டமிழந்து, பெவிலியன் திரும்பியபோது, நோட்புக் செலிபிரேஷன் எனப்படும், வித்தியாசமான கொண்டாட்டத்தை திக்வேஷ் ராதி செய்தார்.

அதாவது, ஆட்டமிழந்து செல்லும் பேட்டருக்கு நெருக்கமாக சென்று, கையில் புக் வைத்து எழுதுவதுபோல்தான், அந்த கொண்டாட்டம் (செலிபிரேஷன்) இருக்கும். அந்த செலிபிரேஷன் முடிந்தப் பிறகு, திக்வேஷை அழைத்து நடுவர் எச்சரிக்கைவிடுத்தார். இதேபோல், இனி செய்யக் கூடாது என நடுவர் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்.

இந்நிலையில், விக்கெட் வீழ்த்திய பின் வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திக்வேஷ் ராதி ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியதாக கூறி அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.