திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும்: நயினார் நாகேந்திரன் கருத்து

தூத்துக்குடி; திமுகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்தால்தான், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும். டெல்லியில் கட்சித் தலைவர்கள், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது, கட்சி மற்றும் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி, கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டு செல்ல வேண்டும் என அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் எதுமில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலைக் கேட்டு, அமைச்சர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பதுதான் சரியான செயல்பாடாக இருக்கும். நமது நாட்டிலேயே இருந்துகொண்டு இன்னொரு நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவது தேச துரோக செயல். அவர்களை தேச விரோதிகள் என்றுதான் சொல்ல முடியும்.

காலனி என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். அதேபோல, பல நல்ல விஷயங்களை அரசு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிவிட்டு, 50 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கஞ்சா புழக்கம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.