புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து, இந்த பணி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மீண்டும் தள்ளிப்போனது. விரைவில் இந்த பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஆதி திராவிடர்கள் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் பொது பிரிவினர் என 4 பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமே மக்களை அரசு வகைப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில்தான் தேசிய அளவில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவன சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சாதி அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிறுவன சேர்க்கையில்
இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் (சிசிபிஏ) கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனாலும், சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக் கெடுப்பு (எஸ்இசிசி) நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று காங்கிரஸ் அரசு கருதியது. இதன்படி 2011-ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இதன் துல்லியத்தன்மை குறித்து கேள்வி எழுந்ததால், இதன் விவரம் வெளியிடப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஓர் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தி உள்ளன என்பது தெளிவாகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது இந்திய அரசியலமைப்பின் 246-வது பிரிவின்படி, மத்திய அரசு பட்டியலின் வரிசை எண் 69-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது மத்திய அரசு தொடர்புடைய விவகாரம் ஆகும்.
ஆனால், சில மாநில அரசுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி ஆய்வுகளை நடத்தி உள்ளன. இதில் சில மாநிலங்கள் சிறப்பாக செய்துள்ளன. ஆனால், சில மாநிலங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசியல் கோணத்தில் மட்டுமே இத்தகைய ஆய்வுகளை நடத்தி உள்ளன. இது போன்ற ஆய்வுகள் சமூகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன.
அரசியல் காரணமாக சமூகக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சாதிவாரி ஆய்வுக்குப் பதில், சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி வரவேற்பு: மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நீக்குவோம் என்று கூறினேன். ஆனால், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்து வந்தது. இப்போது திடீரென அதைச் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.
பிஹாரில் முதல்முறையாக.. நாட்டிலேயே முதல் முறையாக, கடந்த 2023-ம் ஆண்டு பிஹார் மாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.