சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது.
அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதாவது 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநர்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடர்பான பரிந்துரைகளையும் பெற்றது. ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை.
இந்த சூழலில், கடந்த சில நாட்களாக தீவிர போராட்டங்களை ஓட்டுநர் சங்கங்கள் முன்னெடுத்தன. இதற்கிடையே, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை விரைந்து உயர்த்தக் கோரி போக்குவரத்துத் துறைக்கு உரிமை குரல் ஓட்டுநர் சங்க பொதுச்செயலாளர் ஜாஹிர் உசைன் மனு அனுப்பியிருந்தார்.
இதற்கு துறை சார்பில் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், “கடந்த பிப்ரவரி மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தின் பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.