சாதி சான்றிதழ்கள் விவகாரத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முழுமையான விசாரணைக்குப்பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி சாதிச் சான்றிதழ்கள் அளித்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக்கோரி பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழுக்கள் விதிகளின்படி விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். முழுமையான விசாரணைக்குப் பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக 6 வார காலத்தில் உரிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.