மும்பை,
விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே கேப்டனாக தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அவர் திடீரென ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ரோகித் சர்மா அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. அவர் ஓய்வு பெற்றது அவரது பார்ம் காரணமாக அல்ல. உலகக் கோப்பைக்கு பிறகு அவர் டி20 போட்டிகளில் விளையாட விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டு தொடர்களிலும் தொடர வேண்டும் என்பது அவரது முடிவு. ரோகித் சர்மாவின் இலக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதாக இருக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக நாம் அதற்கு தகுதி பெறவில்லை. ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
அவர் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து கவனமாக யோசித்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த முடிவும் வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கும் சம்பந்தம் கிடையாது. கடந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு செய்தது போல அவர் இளம் தலைமுறையினருக்கு வழி விட யோசித்து இருக்கலாம். 2027-ம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை வெல்வதே அவரது அடுத்த இலக்காக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.