புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று பிற்பகலில் அறிவித்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஐ.பி.எல். நிறுத்தப்பட்டது குறித்து தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வருவதன் காரணமாக நடந்து வரும் ஐ.பி.எல். தொடரை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக பி.சி.சி.ஐ. நேற்று அறிவித்துள்ளது.
நாட்டில் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது. ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால பி.சி.சி.ஐ. இதை செய்ய வேண்டி உள்ளது. போட்டி ஒரு முக்கியமான கட்டத்திற்கு நெருங்கி வருவதால் ஐ.பி.எல். விரைவில் மீண்டும் தொடங்கும் என்று நம்புவோம். பி.சி.சி.ஐ. தொடரை நடத்தி முடிக்கும். பாகிஸ்தானால் நீண்ட காலத்திற்கு அழுத்தத்தை கையாள முடியாது. இதன் காரணமாக நிலைமை விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.