அமெரிக்கா, சீனாவை அதிர்ச்சியில் உறைய வைத்த ‘ஆகாஷ்தீர்’

புதுடெல்லி: இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான ‘ஆகாஷ்தீர்’, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

கடந்த 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் துருக்கியும் நேரடியாக களம் இறங்கின. துருக்கியின் சார்பில் அதிநவீன பைகார் யிஹா3 ரக ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.

கடந்த சில நாட்களாக லடாக், காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான துருக்கி ட்ரோன்கள் அலை, அலையாக வந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. ஒரே நேரத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வானில் பறந்தன. அனைத்து ட்ரோன்களையும் இந்திய ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.

இதேபோல சீனாவின் சார்பில் அதிநவீன பிஎல்15 எல்ஆர் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. இந்திய விமான படைத் தளங்களை குறிவைத்து சீன ஏவுகணைகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. இந்த ஏவுகணைகளையும் இந்திய ராணுவம் நடுவானில் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசினர். இதனால் இஸ்ரேல் ராணுவத்தின் ‘அயர்ன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு கவசம் செயலிழந்து அந்த நாட்டில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதேபாணியில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மீது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏராளமான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ என்ற வான் பாதுகாப்பு கவசம் அனைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளையும் நடுவானில் துவம்சம் செய்தது. இது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிஸ் லிமிடெட் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி உள்ளன.

ரேடார்கள், செயற்கைக்கோள்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசம் கண்டறிகிறது. அடுத்த சில நொடிகளில் ‘ஆகாஷ்தீரின்’ உத்தரவின்படி எஸ்400, பரக் 8, ஆகாஷ் உள்ளிட்ட ஏவுகணைகள் சீறிப் பாய்ந்து எதிரிகளின் ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கின்றன.

கடந்த சில நாட்கள் நடைபெற்ற போரின்போது பாகிஸ்தானின் ட்ரோன்களை ஆகாஷ் ஏவுகணைகளும், அந்த நாட்டின் போர் விமானங்கள், ஏவுகணைகளை எஸ்400, பரக் 8 ரக ஏவுகணைகளும் நடுவானில் இடைமறித்து அழித்தன.

இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசத்துக்கு இணையான தொழில்நுட்பம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம்கூட இல்லை. இது அந்த நாடுகளை மிரள வைத்திருக்கிறது.

சீனாவின் அதிநவீன எச்கியூ9 என்ற வான் பாதுகாப்பு கவசத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. ஆனால் இந்த பாதுகாப்பு கவசத்தால் இந்திய ட்ரோன்கள், ஏவுகணைகளை கண்டறிய முடியவில்லை. இடைமறித்து அழிக்கவும் முடியவில்லை. பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்கள் மற்றும் 11 விமான படைத் தளங்களை இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் மிகத் துல்லியமாக தாக்கி அழித்தன.

இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைகள்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், ராணுவ தலைமையகம் ராவல் பிண்டியில் இந்திய ட்ரோன்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன. இதற்கும் இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசம்தான் காரணம். இது 100 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. தற்போது ‘ஆகாஷ்தீர்’ -க்கு இணையான தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீன நிறுவன பங்குகள் சரிவு: சீனாவின் ஜே10சி, ஜேஎப்17 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை பயன்படுத்தி வருகிறது. இரு ரக போர் விமானங்களும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படையின் ரஃபேல், மிக் ரக போர் விமானங்களையும் எஸ்400 ஏவுகணைகளையும் சீன போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் மூலம் இந்தியாவுக்கு பெரிய பாதிப்புகள் இல்லை. இந்திய ராணுவத்தை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானே சண்டை நிறுத்தத்துக்கு முன்வந்தது என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று பஞ்சாபின் ஆதம்பூர் விமான நிலையத்துக்கு சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது எஸ்400 ஏவுகணை அமைப்பு, மிக் ரக போர் விமானங்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார். இதன்மூலம் ஆதம்பூர் விமான படை தளத்துக்கோ, எஸ்400 ஏவுகணைகள், மிக் ரக போர் விமானங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பாகிஸ்தானின் விமானப்படை தலைமையகமான நூர்கான் தளம் உட்பட 11 விமான படைத் தளங்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. அவை ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை மூடப்பட்டு இருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து சீனாவின் ஜே10சி, ஜேஎப்17 ரக போர் விமானங்களை தயாரிக்கும் அவிக் செங்டூ நிறுவனத்தின் பங்குகள் நேற்று 9.31 சதவீதம் சரிந்தன.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ முன்னாள் மூத்த தளபதியும், நவீன போர் கழகம் என்ற ராணுவ கல்வி நிறுவனத்தின் தலைவருமான ஜான் ஸ்பென்சர் கூறும்போது, “இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்கள், ராணுவ தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ஆனால் சீனாவின் உள்நாட்டு ஆயுதங்கள் தோல்வியடைந்து உள்ளன” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.