NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' – அணிகள் இணைப்பில் பின்னடைவு?

மகாராஷ்டிராவில் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்தது. அஜித் பவார் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் அவரது அணியை தேர்தல் கமிஷன் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அறிவித்தது. இதையடுத்து சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சியை இரண்டாக உடைத்த பிறகு பல முறை சரத் பவாரை சந்தித்து இரு அணிகளும் ஒன்றாக செயல்படலாம் என்று அஜித் பவார் கேட்டுக்கொண்டார். ஆனால் சரத் பவார் அதற்கு மறுத்துவிட்டார்.

அதன் பிறகே தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் தன் வசம் கொண்டு வந்தார். மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணையவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.

அஜித் பவார்
அஜித் பவார்

இறங்கி வந்த சரத் பவார்… கைவிரித்த அஜித் பவார்!

இதுவரை அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்து வந்த சரத் பவார் சமீபத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியானது. தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்தால் ஆச்சரியப்பட வாய்ப்பில்லை என்றும், இரு அணிகளும் இணைவது குறித்து அஜித் பவாரும், சுப்ரியா சுலேயும் இணைந்து முடிவு செய்வார்கள் என்று சரத் பவார் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் புனேயில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அஜித் பவார், ”இரு தேசியவாத காங்கிரஸ் அணிகளும் இணைய வாய்ப்பு இல்லை”என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அஜித் பவார் கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே, ”இரு அணிகளும் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படவில்லை”என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அஜித் பவார் கட்சியின் மற்றொரு தலைவர், “எங்களது கட்சியில் இருந்து இது தொடர்பாக சரத் பவார் கட்சி நிர்வாகிகள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் தங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அஜித் பவார் அணியில் சேருவது குறித்து பரிசீலித்து வருவதாக சரத் பவார் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்தாக ஒரு தகவல் பரவுகிறது.

இதையடுத்து முக்கிய பதவிகளுக்கான கட்சி நிர்வாகிகளை மாற்ற சர த்பவார் முடிவு செய்துள்ளார். ஓரிரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கு முன்பு இம்முடிவை எடுக்க சரத் பவார் திட்டமிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.