சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டிய நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரின் வீடு உட்பட சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றும் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீடு அருகே கிழித்து வீசப்பட்டநிலையில் கிடந்த சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, அலுவலகங்கள், திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் அக்கார்டு மதுபான உற்பத்தி நிறுவனம், எஸ்என்ஜே,கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள், அதன் ஆலைகளில் அமலாக்கத் துறை கடந்த மார்ச் மாதம் தீவிர சோதனை நடத்தியது.
சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம் என அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த சூழலில், சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக விசாகனிடமும், அவரது மனைவி, மகனிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
6 மணி நேரம் விசாரணை: அப்போது, விசாகன் வீடு அருகே கிழித்து வீசப்பட்ட நிலையில் சில ஆவணங்கள் கிடந்துள்ளன. முக்கியமான வாட்ஸ்அப் உரையாடல்கள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றியும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சோதனை சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் நீடித்த நிலையில், விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு காரில் அழைத்து சென்றனர். சிறிது நேரம் விசாரித்த பிறகு, அவரது மனைவியை அதிகாரிகள் அனுப்பிவிட்டனர்.
விசாகனிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. அவரது வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள், கிழித்து வீசப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல்சோதனை நடத்தினர். இவர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸின் உறவினர் என்று கூறப்படுகிறது.
திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவகுமார், சாஸ்திரி நகரில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், சேத்துப்பட்டு ஜெகநாதபுரத்தில் உள்ள பாபு, தியாகராய நகரில் உள்ள கேசவன் ஆகியோரது வீடுகள், சூளைமேடு ராஜகீழ வீதியில் உள்ள எஸ்என்ஜே மதுபான நிறுவன அலுவலகம் உட்பட சென்னையில் நேற்று ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், டாஸ்மாக்கில் நடந்துள்ளதாக கூறப்படும் ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. எனினும், சோதனை முடிந்த பிறகே முழு விவரங்களை வெளியிட முடியும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.