புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது போலாரி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு விமானம் அழிக்கப்பட்டதை பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நாட்டின் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. அதன் பின்னர் புரிந்துணர்வு அடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எந்தவித பாதிப்பும் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ச்சியாக கூறி வந்தாலும் செயற்கைக்கோள் எடுத்த படங்கள் உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதாக இருந்தன.
இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சொந்தமான போலாரி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (ஏடபிள்யூஏசிஎஸ்) விமானம் மே 9 மற்றும் 10-ம் தேதி இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அழிக்கப்பட்டதை ஓய்வுபெற்ற பாகிஸ்தான் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “அவர்கள் (இந்தியப் படைகள்) தொடர்ச்சியாக நான்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் அல்லது வானிலிருந்து தரையை தாக்கும் ஏவுகணைகளை ஏவினார்கள். அப்போது பாகிஸ்தான் விமானிகள் தங்கள் விமானத்தைப் பாதுகாக்க விரைந்தனர், ஆனால் ஏவுகணைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன, துரதிர்ஷ்டவசமாக, நான்காவது ஏவுகணை போலாரி விமானப்படை தளத்தில் உள்ள விமான கூரையை தாக்கியது, அங்குதான் எங்கள் ஏடபிள்யூஏசிஎஸ் விமானம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அது முற்றிலும் சேதமடைந்தது’’ என்றார்.
பாகிஸ்தானை தாக்க வரும் கப்பல்கள், வாகனங்கள், ஏவுகணைகள் நீண்ட தூரத்திலேயே கண்டறிய ஏடபிள்யூஏசிஎஸ் விமானங்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், கப்பலிலும் தரையிலும் உள்ள அச்சுறுத்தலை அடையாளம் காணவும், மதிப்பிடவும், நடவடிக்கை எடுக்கவும் நீண்ட தூர ரேடார் கண்காணிப்பு மற்றும் வான்வெளி கட்டுப்பாடு விமானம் உதவுகிறது.