வாஷிங்டன் டி.சி.,
தென்ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற, எலான் மஸ்க்கின் நிறுவனங்களுடனான வாய்ப்புகள் பற்றி ஆலோசிப்பதற்காக சிரில் ராமபோசா திட்டமிட்டு உள்ளார். எனினும் தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான மஸ்க், வெள்ளை இன மக்களுக்கு எதிரான கொள்கைகளை ராமபோசா தொடர்கிறார் என்று குற்றச்சாட்டாக கூறி வருகிறார்.
ஆனால், இதனை ராமபோசா மறுத்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து, அகதிகளாக அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
ராமபோசா உடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் ஒன்றாக நடத்தினார். அப்போது, ஆப்பிரிக்காவில் வெள்ளை இன மக்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி ராமபோசாவிடம், டிரம்ப் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். சமீபத்தில் வெளிவந்த செய்திகள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை சான்றாக கையில் வைத்திருந்த டிரம்ப் அவற்றை பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து டிரம்ப், வெள்ளை இன விவசாயிகள் படுகொலையை ஆப்பிரிக்க அரசு தடுக்க தவறி விட்டது என குற்றச்சாட்டாக கூறினார். அவர்களுக்கு எதிரான நில அபகரிப்புகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளன என டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார். அப்போது, ராமபோசா மற்றும் அவருடைய அரசுக்கு எதிராக டிரம்ப் பேசியது பதற்றம் ஏற்படுத்தியது.
இந்த கூட்டத்தில், சில வீடியோக்கள் மற்றும் செய்தி துணுக்குகளையும் வெளியிட்டார். வெள்ளை இன விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுவதும் மற்றும் படுகொலை செய்யப்படுவதும் நடக்கிறது என ஆவணங்களை கொண்டு அவர் வெளிப்படுத்தினார். இதுபோன்ற வன்முறை மற்றும் இனவெறி சட்டங்களால், வெள்ளை இன தென்ஆப்பிரிக்கர்கள் வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர் என்றும் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனினும் டிரம்பின் இந்த குற்றச்சாட்டுகளை ராமபோசா மறுத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் அனைத்து இன மக்களும் குற்ற செயல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என பதிலாக தெரிவித்து உள்ளார். ராமபோசா அரசு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் சூழலில், மீண்டும் இதனை கூறினால், டிரம்ப் அவர் கூறியதற்கான சான்றுகளை நிரூபிக்க வேண்டும் என்று ராமபோசா அலுவலகம் தெரிவித்து உள்ளது.