மரத்தடியில் உறங்கிய வியாபாரி; சாக்கடை கழிவை கொட்டிய மாநகராட்சி ஊழியர்கள்… உயிரிழந்த சோகம்

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(45). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இவர் கடுமையான வெயில் காரணமாக அங்கு சாலையோரம் இருந்த மரத்திற்கு அடியில் ஓய்வெடுக்க படுத்தார். அப்படியே உறங்கிவிட்டார்.

அந்நேரம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடையை தூர்வாரிய கழிவை டிராக்டரில் அங்கு கொண்டு வந்தனர். அவர்கள் மரத்திற்கு அடியில் சுனில் குமார் உறங்கிக்கொண்டிருப்பதை பார்க்காமல் அவர் மீது சாக்கடை கழிவை தட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

சடலம்

நீண்ட நேரம் கழித்துதான் அவர் மீது சாக்கடை கழிவு போடப்பட்டு இருப்பது உறவினர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவரது உறவினர்கள் சுனில் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் சுனில் குமார் உயிரிழந்து விட்டார். மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதாபமாக சுனில் குமார் இறந்து போனார்.

அவர் உறங்கிக்கொண்டிருந்த இடம் சாக்கடை கழிவை போடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் கிடையாது. அப்படி இருந்தும் மாநகராட்சி ஊழியர்கள் அந்த இடத்தில் சாக்கடை கழிவுகளை போட்டு சுனில் குமாரை உயிரோடு சாகடித்துள்ளதாக அவரின் தந்தை கிர்வார் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கிர்வார் சிங் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் மாநகராட்சி ஒப்பந்ததாரர் சாஸ்திரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாநகராட்சி ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டனரா என்பதை தெரிந்து கொள்ள அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் சுனில் குமார் மது அருந்திவிட்டு குடிபோதையில் மரத்திற்கு அடியில் உறங்கியதாக தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.