ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு எப்போது..? – மனம் திறந்த தோனி

அகமதாபாத்,

அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி முதலாவதாக களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், கலில் அகமது மற்றும் பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பெற்ற ஆறுதல் வெற்றியோடு சென்னை அணி தொடரை நிறைவு செய்தது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “எங்களுக்கு இது நல்ல சீசன் இல்லை, சில வீரர்களின் பெர்பாமென்ஸ் சரியாக இல்லை. மேலும் சீசனும் எங்களுக்கு சாதகமாக இல்லை. ஆனால் இன்று நல்ல கிரிக்கெட் விளையாடினோம்” என்று கூறினார்.

தொடர்ந்து ஓய்வு குறித்து பேசிய அவர், “அதனை பற்றி முடிவு எடுக்க எனக்கு இன்னும் 4-5 மாதங்கள் உள்ளன. எந்த ஒரு அவசரமும் இல்லை. உடலை பிட்டாக வச்சுக்கணும். நீங்க உங்க சிறந்த திறமைய வச்சுக்கணும்.

கிரிக்கெட் வீரர்கள் அவங்க செயல்திறனுக்காக ஓய்வு பெறத் தொடங்கினால், சிலர் 22 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள். நான் ராஞ்சிக்கு செல்ல போகிறேன். வீட்டிற்கு சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. சில பைக் ரைடுகளை திட்டமிட்டுள்ளேன்.

நான் ஓய்வு பெறுவேன் என்றும் சொல்லவில்லை, அதே சமயம் திரும்பி வருவேன் என்றும் சொல்லவில்லை.. அதனை பற்றி முடிவு எடுக்க இன்னும் அதிக நேரம் உள்ளது. யோசித்து விட்டு பின்னர் முடிவு செய்வேன்.

இந்த சீசன் தொடக்கத்தில் நாங்கள் சென்னையில் நான்கு போட்டிகள் விளையாடினோம். அதில் இரண்டாவதாக பேட்டிங் செய்தோம். ஆனால் தனிப்பட்ட முறையில் முதல் இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது என்று நான் நினைத்தேன். இதேபோன்று எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் இந்த சீசனில் சரியாக விளையாடவில்லை.

ரன்களை குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எங்கள் அணியில் சில ஓட்டைகளும் இருந்தது. ஆனால் இம்முறை அனைத்தையும் சரி செய்து விட்டோம். அடுத்து சீசனில் ருதுராஜ்க்கு சென்னை அணி குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை.

14 வயது வீரரான வைபவ் என்னுடைய காலில் விழுந்த போது எனக்கு திடீரென்று நான் வயதாகி விட்டேனோ என்று தோன்றியது. ஆண்ட்ரே சித்தார்த் என்ற வீரர் பேருந்தில் என் அருகில் அமர்ந்திருந்தார் .அப்போது அவரின் வயதை கேட்டேன். என்னை விட 25 வயது குறைந்தவராக அவர் இருக்கிறார். அப்போதுதான் நமக்கு வயதாகி விட்டது என்று நான் உணர்ந்தேன்” என்று அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.