பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், லெமன் ஹில்ஸில் இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது. அந்தநேரத்தில் ஏராளமானோர் பூங்காவில் கூடியிருந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஒரு கார் வந்து நின்றதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், கார் மோதி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்துக்கு இந்தச் சம்பவம் மேலும் சாட்சியாக உள்ளது. அண்மையில், தெற்கு கரோலினாவிலுள்ள லிட்டில் ரிவரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 11 பேர் காயமடைந்த நிலையில், இந்தச் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. தெற்கு கரோலினா துப்பாக்கிச்சூடு சம்பவம், ஒரு தனித்தச் சம்பவம் என்று போலீஸார் கூறுகின்றனர்.
சமீபத்திய ஆய்வு ஒன்றில் 15 அமெரிக்கர்களில் ஒருவர் ஏதோ ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார். கொலராடோ பவுல்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, அமெரிக்காவில் உள்ள வயதுவந்தோரில் 7 சதவீதம் பேர் ஏதோ ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் பார்த்துள்ளனர். 2 சதவீதம் பேர் துப்பாக்கிச்சூடு ஒன்றில் காயமடைந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.