புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை, புதுச்சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டன.
கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 28-ம் தேதி 71 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார். மீதம் உள்ள 68 பேருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர், குமிதினி லாகியா (மறைவு), சாரதா சின்ஹா (மறைவு) ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். மறைந்த பத்ம விபூஷண் விருதாளர்கள் சார்பில் குடும்பத்தினர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
பத்ம பூஷண் விருதுதமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரசேகர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் பிபக் தேப்ராய், கைலாஷ் நாத் தீக்சித், ஜாலின் கோஸ்வாமி, மனோகர் ஜோஷி (மறைவு), ஆனந்த் நாக், சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
பத்மஸ்ரீ விருது: தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை, எழுத்தாளர் சீனி விஸ்வநாதன், எம்.டி. ஸ்ரீநிவாஸ், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி மற்றும் நாராயணன் (மறைவு), சாஜன் பாஜங்கா, நீரஜா பாலியா, அஜய், ஹர்சந்திரன் சிங், பீம் சிங், செலான் ஏக்நாத், விலாஸ் கஜனன்ராவ், மகாவீர் நாயக், சோனியா நில்யானந்த், அசூல் ராமச்சந்திர பாலவ், வி.ஆர்.பஞ்சமுகி, லாவ்ஜிபாய், சுவாமி பிரதிபிலானந்தா, பிரசாந்த் பிரகாஷ், நாகேந்திரநாத் ராய், அசோக் லஷ்மண் சரப், அரவிந்த் சர்மா, அசுதோஷ் சர்மா, சுபாஷ் கெலுலால் சர்மா, ஹர்விந்தர் சிங், சந்திரகாந்த் சோம்புரா, வெங்கப்பா அம்பாஜி சுகலேகர், கேரளாவை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரரும் நடிகருமான விஜயன், ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
அமெரிக்கவாழ் தமிழர்: சென்னையை பூர்விகமாக கொண்ட சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் அறக்கட்டளை தலைவராக பணியாற்றி வருகிறார். குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதினை அவர் பெற்றுக் கொண் டார்.