Kerala : மூழ்கிய கப்பல்; கரை வந்து மோதும் கன்டெய்னர்கள் – கடல் சீற்றத்தால் சிக்கல்?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு கடந்த 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியது. அந்த கப்பல் நேற்று முன் தினம் முழுமையாக மூழ்கியது. கப்பல் கேப்டன் உட்பட 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடலில் மிதக்கும் கன்டெயினர்கள்

அதே சமயம் கப்பலில் இருந்த 643 கண்டெய்னர்களில் நூறுக்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் மிதந்து வருகின்றன. அவற்றில் பலவும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட கடற்கரைகளில் ஒதுங்கி வருகின்றன. கொல்லத்தில் 34 கண்டெய்னர்களும் ஆலப்புழாவில் இரண்டு கண்டெய்னர்களும் கரை ஒதுங்கின.

இவற்றை பரிசோதித்ததில் 25 கண்டெய்னர்கள் காலியாக உள்ளன. கண்டெய்னர்களில் உள்ள நம்பர்களை வைத்தும் கப்பல் கார்கோ லிஸ்ட்டை வைத்தும் சரிபார்த்ததில் இந்த கண்டெய்னர்களில் ரசாயன பொருள்களோ, ஆயில் போன்றவைகளும் இல்லை என்பது உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கண்டெய்னர்கள் கடற்கரையில் உள்ள தடுப்பு கற்களில் மோதி உடைந்துள்ளன. உடைந்த கண்டெய்னர்களில் நியூஸ் பிரிண்ட் பேப்பர் மற்றும் கிரீன் டீ ஆகியவை இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளன. 9 கண்டெய்னர்களில் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய கப்பல்
கடலில் மூழ்கிய கப்பல்

கரை ஒதுக்கும் கன்டெய்னர்கள்

கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் கரை ஒதுங்கிய கன்டெய்னர்கள் வெவ்வேறு இடங்களுக்கு அடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கடல் அலை தடுப்புக்காக போடப்பட்டுள்ள கற்களில் மோதி கன்டெய்னர்கள் உடைந்து நாசமாகி வருகின்றன.

கொல்லம் சக்திகுளங்கரை பகுதியில் கரை ஒதுங்கிய கண்டெய்னர்கள் மீண்டும் கடலில் அடித்துச் செல்லாமல் இருக்க போலீஸாரும், மீனவர்களும் இணைந்து கயிறு மூலம் கட்டிப்போட்டுள்ளனர். கரை ஒதுங்கிய கண்டெய்னர்களின் அருகே மக்கள் செல்லாமல் இருக்க 200 மீட்டர் தூரத்தில் போலீஸார் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

கன்டெய்னர்கள் மட்டும் அல்லாது கப்பலில் இருந்து ஆபத்து காலத்தில் தப்பிச் செல்ல பயன்படும் லைஃப் போட்டும் கொல்லத்தில் கரை ஒதுங்கியது. திருவனந்தபுரத்தில் அஞ்சுதெங்கு உள்ளிட்ட கடற்கரைகளில் கண்டெய்னர்கள் ஒதுங்கி வருகின்றன.

கரை ஒதுங்கிய கப்பலின் லைஃப் போட்

பரவும் எண்ணெய் படலம்

கப்பலில் இருந்த 643 கண்டெய்னர்களில் 500 கண்டெய்னர்களில் என்ன உள்ளன என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. கப்பல் மூழ்கிய பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் கடல் பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்துவருவதால் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் கடல் பகுதியிலும் மோசமான காலநிலை நிலவுகிறது.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலில் பரவியுள்ள எண்ணெய் படலத்தை தடுக்கும் வகையில் பூம் எனப்படும் தடுப்பு வேலி ஏற்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோஸ்ட் காட் கப்பல்களான விக்ரம், சமர்த், சக்‌ஷம் ஆகியவை மாசுகளை தடுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதே சமயம் எண்ணெய் படலம் கேரள மாநில கடல் பகுதியை இன்னும் அடையவில்லை என கப்பல் படை அறிவித்துள்ளது.

கண்டெய்னர்களை மீனவர்கள் உதவியுடன் கட்டி வைக்கும் போலீஸ்

ஆபத்தான ராசாயனம்?

ஆபத்தான கால்சியம் கார்பைட் 12 கண்டெய்னர்களிலும், 13 கண்டெய்னர்களில் ரசாயன பொருட்கள்  உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவைகளால் இன்னும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடல் நீரை பரிசோதித்து அதில் ரசாயனம் கலந்துள்ளதா என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கியுள்ள கண்டெய்னர்களை மீட்க லைபீரியா கப்பல் கம்பெனி கேரளாவுக்கு வருகிறது. கடலில் இருந்து மீட்கப்பட்டு கொச்சி துறைமுக யார்டில் வைக்கப்படும் கண்டெய்னர்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கன்டெய்னர்களுக்கு உரிமைகோரும் நபர்களுக்கு அவற்றை வழங்கவும், தண்ணீரில் மூழ்கிய கன்டெயினர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரை ஒதுங்கிய கண்டெய்னர்

மீனவர்களுக்கு பாதிப்பு

ஆயில் மற்றும் ஆபத்தான பொருட்கள் அடங்கிய கண்டெய்னர்கள் கடலில் மிதப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம்  ஆகிய 3 மாவட்டங்களில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும்தான் பெரிய அளவிலான மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன.

கடலில் மிதக்கும் கண்டெய்னர்கள் மோதினால் சிறிய படகுகளும், பெரிய விசைப்படகுகளும் உடையும் அபாயம் ஏற்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் உள்ளனர்.  அதுமட்டும் அல்லாது அரபிக்கடலை உள்ளடக்கிய இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் இப்போதே மீன்பிடி தொழில் பாதிப்படைந்துள்ளது மீனவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.