சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு இடம் மாற்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அடுத்த 4 மாதங்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரை ராஜஸ்தானுக்கு இடமாற்றம் செய்யவும், ராஜஸ்தான் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவை சென்னைக்கு இடமாற்றம் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் நியமனமும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் (கே.ஆர்.ஸ்ரீராம்), சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2024 செப்டம்பர் 27-ம் தேதி பொறுப்பேற்றார். இவர் 2025 செப்டம்பர் 27-ம் தேதியுடன் பணிஓய்வு பெற இருந்த நிலையில், இவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யவும், அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பது நீதித்துறை வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட அனுமதிக்கப்பட்ட மொத்த பணி இடங்கள் 75. இதில் தற்போது 60 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 15 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 9 வழக்கறிஞர்களை புதிய நீதிபதிகளாக நியமிக்கும் வகையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில், கடந்த மே 2-ம் தேதி ஓய்வுபெற்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஜூலை 24-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ள நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியம், 9 பேர் அடங்கிய பட்டியலை கடந்த ஏப்ரல் இறுதியில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு பரிந்துரை செய்தது. இதில் 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தும், 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுதொடர்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சில வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஒருசில விமர்சனங்களை எழுப்பியுள்ளன. ‘பரிந்துரை பட்டியலில் உள்ளவர்களில் 4 பேர் ஆளும்கட்சி ஆதரவு மனப்பான்மை கொண்டவர்கள். மற்ற 5 பேர், கொலீஜியத்தில் இருந்த சில நீதிபதிகளின் சிபாரிசுப்படி, சாதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களும்கூட ஆளும்கட்சி ஆதரவு மனப்பான்மை கொண்டவர்கள்தான். அமைச்சர்கள் பலரும் பல்வேறு வழக்குகளில் சிக்கி சட்டரீதியாக சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், அதை சமாளிக்கவே இந்த நடவடிக்கையில் ஆளும்கட்சி இறங்கியுள்ளது’ என்று அவர்கள் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் விளக்கமாக தெரிவித்து புகார்களும் அனுப்பப்பட்டுள்ளன. ‘உயர் நீதிமன்ற கொலீஜியத்தில் உள்ள தலைமை நீதிபதி ராஜஸ்தானுக்கு செல்கிறார். ஒரு நீதிபதி ஓய்வு பெற்றுவிட்டார். இன்னொரு நீதிபதி ஓய்வு பெற உள்ளார். இந்த சூழலில், கொலீஜியம் அனுப்பி வைத்த 9 பேர் அடங்கிய சிபாரிசு பட்டியலை நிராகரித்துவிட்டு, தகுதி, திறமை அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய கொலீஜியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அவர்கள் புகார் மனுக்களில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை பின்பற்றி அனைத்து சாதியினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மேலும், உச்ச நீதிமன்றத்தில் தற்போது பதவி வகித்து வரும் நீதிபதிகளுக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான கே.ஆர்.ஸ்ரீராமுக்கும் இடையே முரண்பாடு இருந்து வந்ததாகவும், இந்த சூழலில் இன்னும் 4 மாதத்தில் பணி ஓய்வு பெற இருந்த அவரை ராஜஸ்தானுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் நியமனமும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

4 நீதிபதிகள் புதிதாக வருகை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றிய ஆந்திராவை சேர்ந்த பட்டு தேவானந்தை ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவேக்குமார் சிங்கை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கெனவே கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பிறப்பித்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அவர்கள் இன்னும் பதவியேற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள டி.வினோத்குமாரையும் சென்னைக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவை சென்னைக்கு மாற்றவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பதால் வெளிமாநில நீதிபதிகள் 4 பேர் புதிதாக சென்னைக்கு வரவுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.