தமிழகத்தில் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும்: கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு அதிகனமழை – வானிலை ஆய்வு மையம்

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டி, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையக்கூடும்.

மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (மே 29, 30) தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் 40-50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். மே 31 முதல் ஜூன் 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதிகனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 15 செ.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 செ.மீ., நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட், மேல்பவானி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 13 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சியில் 12 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறில் 11 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, நீலகிரி மாவட்டம் குந்தா பாலத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.