18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, இப்போது பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் 2025 லீக் போட்டிகளில், புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் டாப் 4 இடங்களைப் பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் முதலிடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது இடம், குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடம், மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்தத் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக செயல்பட்டு, வரலாற்றில் முதன்முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து தொடரைவிட்டு வெளியேறி இருக்கிறது.
இந்நிலையில் சென்னை ரசிகர்கள் குறித்து சிஎஸ்கே வீரர் பதிரனா பேசியிருக்கிறார். “நாங்கள் எதிர்பார்த்த சீசனாக இது அமையவில்லை. ஆனால், இந்த ஏற்றத்தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது.

அது சென்னை ரசிகர்களின் அன்பும், ஆதரவும். என் மீது நம்பிக்கை வைத்த அணிக்கும், நிர்வாகத்திற்கும், ஒவ்வொரு ஆதரவாளருக்கும் நன்றி. தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இந்தக் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுள்ளவனாக உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.