வாஷிங்டன் டி.சி.
அமெரிக்காவுக்கு, கனடா நாட்டின் வழியே இந்தியர்களை கொண்டு செல்லும்போது, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தனர். இநத் விவகாரத்தில், புளோரிடாவை சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் பட்டேல் (வயது 29) மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஷாண்ட் (வயது 50) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மின்னசோட்டா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அவர்களில், பட்டேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அந்தோணிக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அந்தோணிக்கு 2 வருட கண்காணிப்பின் கீழ் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
இருவரும், அவர்களுடைய சொந்த பலன்களுக்காக, ஆயிரக்கணக்கானோரின் வாழ்வை ஆபத்தில் சிக்க வைத்துள்ளனர். இதில், 2 சிறிய குழந்தைகள் பனியில் உறைந்து மரணம் அடைந்து உள்ளனர். அதனை அவர்கள் கவனித்தும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர் என நீதிபதி மாத்யூ கேலியோட்டி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
எல்லை வழியேயான இந்த மனித கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய வழக்கில் அமெரிக்கா மற்றும் கனடா போலீசாருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். இந்த ஆட்கடத்தல் வேலைக்காக இரண்டு பேருக்கும் 1 லட்சம் அமெரிக்க டாலர் கிடைக்கும்.