சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை – நடந்தது என்ன?

சென்னை: பெண் மருத்துவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் மு.அகிலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (மே 29) அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மருத்துவ கல்லூரியில் கடந்த மார்ச் 24-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பணி முடிந்து திரும்பும் போது, அடையாளம் தெரியாத நபரால் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானார். மருத்துவ மாணவியின் பாதுகாப்பில் கல்லூரி நிர்வாகம் சமரசம் செய்து கொண்டதை கண்டித்தும், முறையான பாதுகாப்பு மற்றும் மின்விளக்கு போன்ற அடிப்படை தேவைகளுக்காக அந்த கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் போராட்டத்துக்கு அனைத்து மருத்துவ சங்கங்களும் ஆதரவளித்தன. அதுபோல தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தை சார்ந்த மாநில தலைவர் கார்த்தீஸ்வரன், மாநில சட்ட பிரிவு செயலாளர் கிரண் குமார் ஆகியோர் போராட்டத்தில் அவர்களோடு இணைந்தனர். இந்நிலையில், கல்லூரி டீனுக்கு எதிராக போராட்டம் நடத்திய பயிற்சி மருத்துவர்களை குறிவைக்கும் விதமாக போராட்ட நாட்களை பயிற்சி காலமாக நீட்டிப்பு செய்வேன் என்று பயிற்சி மருத்துவ காலம் முடிவதற்கு முன்பாக சுற்றறிக்கை அனுப்பினார்.

இதனை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகு, அந்த முயற்சி கைவிடப்பட்டது. கொல்கத்தா மருத்துவக் கல்லூரி பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு பிறகு அரசின் வழிகாட்டுதலின் பேரில், பெண் பயிற்சி மருத்துவருக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் கல்லூரியில் இல்லாமலிருந்தாலும், பல்வேறு அடிப்படை வசதிகள் கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு செய்து தரப்படவில்லை.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் மற்றும் சட்டப்பிரிவு செயலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை கல்லூரி டீன் கடந்த 26-ம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. மருத்துவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஒரு சங்கம் எதை செய்ய வேண்டுமோ, அதைத்தான் செய்துள்ளது.

தங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களின் குரல்களை நசுக்குவதற்கு, சங்க தலைவர்களை தனி மனிதராக கருதி நடவடிக்கை எடுப்பதற்கு டீன் பரிந்துரைப்பது அவருடைய நிர்வாக திறமையின்மையை அவரே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுவது போல் உள்ளது. தொடர்ச்சியாக மருத்துவர்கள் விரோதப் போக்கு, மருத்துவ மாணவர்கள் விரோத போக்கு, பழிவாங்குதல் நடவடிக்கை, பெண் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியுள்ளார்.

சாதாரண மின்விசிறி, மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர கூட மனமில்லாமல் தனது பணியில் அலட்சியம் காட்டி ஆக்கபூர்வமான பணிகளை செய்ய மறுத்து, தன்னுடைய நிர்வாக திறமை இன்மையால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படும் டீன் மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுத்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும்.

பயிற்சி மருத்துவர்களுக்கான போராட்டத்தில் அனைத்து மருத்துவ சங்கங்களும் ஆதரவு கொடுத்த நிலையில் குறிப்பிட்ட மருத்துவ சங்கத்தைச் சார்ந்த தலைவர்களை மட்டும் குறிவைப்பது ஏதோ உள்நோக்கத்துடனும், யாருடைய பின்புல அழுத்தத்துடன் செய்யப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்தை திரும்பப் பெறாவிட்டால் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் டீனின் அராஜகம் மற்றும் மருத்துவர்கள் விரோத போக்கை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.