“பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது மனிதகுலத்தின் மீதான தாக்குதல்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது மனிதகுலத்தின் மீதான தாக்குதல் என்றும், இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு பொருத்தமான பதிலடி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலம் உதயமானதன் 50-ம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்துக்குச் செல்ல இருந்தார். எனினும், சீரற்ற வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வடகிழக்கு பகுதியை வளர்ச்சியின் மையமாக அரசு கொண்டு வந்துள்ளது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என்னும் நான்கு வலுவான தூண்களில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது உருவாக்கப்படும். சிக்கிம் விவசாயிகளுக்கு திறந்த மனதுடன் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில், இன்று முன்னேறி வரும் விவசாயத்தின் புதிய போக்கில் சிக்கிம் முன்னணியில் உள்ளது. சிக்கிமின் இயற்கை மீன்வளத் தொகுப்பை ஊக்குவிக்க, சிக்கிமில் நாட்டின் முதல் இயற்கை மீன்வளத் தொகுப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இது சிக்கிம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

டெல்லியில் நடந்த நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தின் போது, ​​ஒவ்வொரு மாநிலமும் சர்வதேச அளவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும் என்று நான் கூறினேன். சிக்கிம் உலகளாவிய சுற்றுலா தலமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாநாடுகள், நல்வாழ்வு மற்றும் இசை நிகழ்ச்சி சுற்றுலாவின் மையமாக சிக்கிமை மாற்றுவதே எங்கள் கனவு. சிக்கிமின் திறனை உலகம் புரிந்துகொள்ளும் வகையில் ஜி20 கூட்டங்களை நாங்கள் நடத்தினோம்.

இந்தியாவை விளையாட்டு வல்லரசாக மாற்றுவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிக்கிம் சாகச மற்றும் விளையாட்டு சுற்றுலா வளர்ச்சிக்கு உகந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் இந்த திசையில் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கடந்த மாதம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஒரு பொருத்தமான பதிலடி. பஹல்காமில் பயங்கரவாதிகள் செய்தது மனிதகுலத்தின் மீதான தாக்குதல், இப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட்டுள்ளோம்.

சிக்கிம் நமது நாட்டின் பெருமை. அதன் மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். சிக்கிம் 50 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கென ஒரு ஜனநாயக எதிர்காலத்தை முடிவு செய்தது. இந்த 50 ஆண்டுகளில், இந்தியாவின் வானத்தை ஒளிரச் செய்த நட்சத்திரங்கள் சிக்கிமில் இருந்து தோன்றியுள்ளன.

சிக்கிம் முன்னேற்றத்தின் முன்மாதிரியாக மாறியுள்ளது. மேலும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் செழுமையின் சின்னமாக உருவெடுத்துள்ளது.

இந்தியா விரைவில் விளையாட்டு வல்லரசாக மாறும். சிக்கிம் மற்றும் வடகிழக்கு இளைஞர்கள் இந்தக் கனவை நனவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பார்கள். சிக்கிம் நமக்கு பைச்சுங் பூட்டியா போன்ற கால்பந்து ஜாம்பவான்களையும், தருண்தீப் ராய் போன்ற ஒலிம்பியன்களையும், நாட்டைப் பெருமைப்படுத்திய ஜஸ்லால் பிரதான் போன்ற வீரர்களையும் கொடுத்தது. சிக்கிமில் உள்ள ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்திலிருந்தும் ஒரு சாம்பியன் உருவாக வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.