கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்குச் சென்று கழிவறையின் கதவினை மூடாமலேயே பயன்படுத்தியுள்ளார். இதனைக் கவனித்த பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகள் கழிவறையின் கதவினை மூடியுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கதவினை திறந்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ‘கழிப்பறையின் கதவினை ஏன் மூடினீர்கள்?’ எனக் கேட்டு இரு மாணவிகளையும் அனைவரது முன்னிலையிலும் தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமன்றி, சக மாணவிகள் முன்பாக காலணியால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனால் அந்த இரண்டு மாணவிகளும் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.

2017-ம் ஆண்டு, நவம்பர் 29-ம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மாவட்டக் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தும், அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், விழுப்புரம் மாவட்டம் கல்வி உரிமை ஆணையத்திற்கு உட்பட்ட சின்ன சேலம் அரசு பெண்கள் பள்ளியில் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதன்படி நேரில் சென்று விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள் அளித்த விசாரணை அறிக்கையின்படி ‘இரு மாணவிகளையும் ஆசிரியர் சாந்தி கடுமையான வார்த்தைகளால் திட்டியதும் பின்பு காலணியால் அடித்துத் துன்புறுத்தியதும்’ உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் ஒரு மாதத்திற்குள் வழங்கத் தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்த நான்கு லட்சம் ரூபாயை ஆசிரியர் சாந்தியிடம் இருந்து தமிழக அரசு பெற்றுக் கொள்ளவும், மாணவிகளைத் தாக்கிய சின்ன சேலம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.