தமிழகத்தில் 6,500 ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்கள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

தூத்துக்குடி: தமிழகத்தில் 6,500 அங்கன்வாடி மையங்கள் ‘ஸ்மார்ட் அங்கன்வாடி’ மையங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவாக 100 மில்லி பால், 2 முட்டை, ஒரு கப் சுண்டல், 3 பிஸ்கட் ஆகியவை வழங்கப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவு வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று (மே 30) நடைபெற்றது. மருத்துவமனை டீன் கு.சிவக்குமார் தலைமை வகித்தார்.

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவுகளை வழங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “டயலாசிஸ் செய்யும் நோயாளிகளுக்குத் தினமும் புரதச் சத்துள்ள உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர்களுக்கு ஒரு டம்ளர் பால், 2 முட்டை, ஒரு கப் சுண்டல், 3 பிஸ்கட் ஆகியவை தினமும் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தினமும் 22 பேர் டயலிசிஸ் செய்கிறார்கள். அவர்களுக்குத் தினமும் இந்த உணவு வழங்கப்படும். இது வெளியூர்களிலிருந்து வரும் நோயாளிகளுக்கு நிச்சயம் பயன் தரக்கூடியதாக இருக்கும்.

புத்தகம், சீருடை: கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த அன்றே புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுபோல இந்த ஆண்டு முதல் அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு முதல் நாளிலேயே புத்தங்கள், சீருடைகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்களிலும் ஜூன் 2-ம் தேதி குழந்தைகளுக்குப் புத்தங்கள், சீருடைகள் வழங்கத் தயாராக உள்ளன.

6500 ஸ்மார்ட் அங்கன்வாடி: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் வரை சுமார் 6,500 அங்கன்வாடி மையங்கள் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, புதிய வண்ணங்கள் பூசப்பட்டு, எல்இடி டிவி வசதி, ஆர்ஓ கருவி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. சிஎஸ்ஆர் நிதி, எம்எல்ஏ, எம்பி நிதி, மத்திய – மாநில அரசுகளின் சிறப்பு நிதி, மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதி போன்ற நிதியுதவிகளுடன் இந்த மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சிசு மரணம் குறைவு: எடை குறைவாகப் பிறக்கக்கூடிய குழந்தைகள் குறித்த விபரங்கள் சமூக நலத்துறை மூலம் பெறப்பட்டு, அந்த குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. அக்குழந்தைகளுக்குக் கூடுதல் சத்துணவு வழங்குவதுடன், தாய்மார்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன.

அங்கன்வாடிகளுக்கு வரும் குழந்தைகள் மட்டுமின்றி, பிறந்த குழந்தைகள் வீடுகளிலிருந்தாலும், அங்கன்வாடி பணியாளர்கள் வீடு தோறும் சென்று, அக்குழந்தைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி ஊட்டச்சத்து வழங்கி வருகின்றனர். குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மீது கவனம் செலுத்தி ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுவதன் மூலம் தமிழகத்தில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட சிசு மரணம் குறைந்துள்ளது. இதற்காக சமூகநலத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காலை உணவுத் திட்டம்: தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் அனைத்து இடங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பாகத் திட்டக்குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், பள்ளிகளில் காலை உணவு உண்ணும் பிள்ளைகளை நோய்களுக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவில்லை எனப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தளவுக்குக் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதாகப் பெற்றோர்களே தெரிவித்துள்ளனர். அதுபோல குழந்தைகள் ஈடுபாட்டோடு படிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். காலை உணவுத் திட்டம் வரும் கல்வி ஆண்டிலிருந்து நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.