ஒடிசாவை சேர்ந்த தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலம் தேன்கனலை சேர்ந்தவர் ரதிகாந்த ரூட். இவர் சுரங்கம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தன்னிடம் லஞ்சம் கேட்பதாக கூறி சிபிஐ-யிடம் புகார் அளித்தார்.
இவர் அளித்த புகாரில், பணமோசடி வழக்கில் கைது செய்யாமல் இருப்பதற்காக அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்சி ரூ. 5 கோடி கேட்டதாகவும், பேரம் பேசியதில் பின்னர் லஞ்சத்தை ரூ.2 கோடியாக குறைத்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து ரகுவன்சியை பொறி வைத்து பிடிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த நிலையில், ரூ. 2 கோடியில் முதல் தவணையாக ரூ. 50 லட்சத்தை லஞ்சமாக கொடுத்தபோது அமலாக்கத் துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சிபிஐ விசாரணையில் ரகுவன்சி கடந்த காலங்களில் இதுபோன்ற லஞ்சம் பெற்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரகுவன்சி ஐஆர்எஸ் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு தேர்வானவர்.