போபால்,
மத்தியபிரதேச மாநிலம் லாஞ்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாம்ரைட், கடந்த கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்சல் அனுப்பியிருந்தார். அதில் இந்திய தேசியக் கொடி, வெடிபொருட்கள் தொடர்பான சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் அரசியலமைப்பின் நகல், புகார் கடிதம் ஆகியவை இருந்தன.
புகார் கடிதத்தில் தனது கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்த அவர், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், நாடாளுமன்ற கட்டிடத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை முடிவில், ஐபிசி பிரிவு 506 (II) இன் கீழ் முன்னாள் எம்.எல்.ஏ. சாம்ரைட்டுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி விகாஸ் துல் இன்று தீர்ப்பு வழங்கினார். மேலும் நாடாளுமன்றக் கட்டிடத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டியது, அரசு சொத்துக்களை அழிக்கும் அச்சுறுத்தல் என நீதிபதி கருத்து தெரிவித்தார். சாம்ரைட் சார்பாக வழக்கறிஞர் மணீஷ் குமார் சவுத்ரி ஆஜராகி வாதாடினார்.