டெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. 3 நாட்கள் நடந்த மோதலில் ஏவுகணை, டிரோன்கள் மூலம் இரு தரப்பிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலரும் உயிரிழந்தனர். பின்னர், இரு தரப்பும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுபம் திவிதி என்பவரும் உயிரிழந்தார். சுபம் திவிதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் இஷ்னெயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப்பின் காஷ்மீருக்கு தம்பதி சுற்றுலா சென்ற நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுபம் திவிதி உயிரிழந்தார்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவிதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உத்தரபிரதேசத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி கான்பூரில் திவிதியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சுபம் திவிதியின் தந்தை, தாய், மனைவி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.