சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதால், பாஜகவினருடன் கீழ்மட்ட அளவிலிருந்து மேல்மட்டம் வரை அதிமுகவினர் அனைவரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தலுக்கு தயாராவது, கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் 2-வது நாளாக நேற்றும் பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
காலையில் திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்களும் மாலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர்கள் நியமனம் எப்படி நடைபெற்று வருகிறது என கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே நிர்வாகிகளை நியமித்து, மேற்கண்ட மாவட்ட செயலாளர்கள் அளித்த படிவங்களை எடுத்து, தகவல் தொழில்நுட்ப அணி உதவியுடன், அதே கூட்டத்தில் தொடர்புகொண்டார்.
அவர்களிடம், அதிமுகவில்தான் இருக்கிறீர்களா, இந்த படிவத்தை பூர்த்தி செய்து வழங்க யாராவது நிர்பந்தித்தார்களா, எத்தனை ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறீர்கள் என பழனிசாமி சார்பில் விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம், பாஜகவுன் கூட்டணி அமைந்த பிறகு, கீழ்மட்ட அளவில் அவர்கள் நம்மோடு எப்படி பழகுகின்றனர் என்றும் கேட்டறிந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்தத் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல். கட்சியின் வெற்றிக்காக அடுத்த ஓராண்டு காலம் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்க வேண்டும். வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர்கள் நியமன பணிகளை விரைந்து முடித்து, அனைவரும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். திமுக தவிர்த்து, தவெக உள்ளிட்ட பிற கட்சிகளை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். பாஜகவினருடன் கீழ்மட்ட அளவிலிருந்து மேல்மட்டம் வரை அதிமுகவினர் அனைவரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றியை உறுதி செய்ய முடியும்.
கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் யாரும் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.