நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை சேவைகளுக்கான மாதாந்திர கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1998 (தமிழ்நாடு சட்டம் 1999) பிரிவு 199 (1)-ன் துணைப் பிரிவின் கீழ் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டணங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநகரில் இதுவரை குடியிருப்பு இணைப்புகளுக்கு ஒருமித்த தொகையாக ரூ.40 ஆக இருந்த மாதாந்திர கட்டணம், தற்போது 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.150 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தற்போது சதுர அடி அடிப்படையில் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 600 சதுர அடிக்கு கீழ் ரூ.150 , 601- 1,200 சதுர அடி வரை ரூ. 200, 1,201-1,800 சதுர அடி வரை ரூ. 250, 1,801- 3,500 சதுர அடி வரை ரூ.300, 3,501- 5,000 சதுர அடி வரை ரூ. 400, 5,001- 10,000 சதுர அடி வரை ரூ. 500, 10,001 சதுர அடிக்கு மேல் ரூ. 800 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை: மேலும், பாதாள சாக்கடை கட்டணத்தை செலுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி விண்ணப்பிப்போர் கழிவுநீர் இணைப்பு பெற விரும்பும் தங்கள் வீட்டின் உரிமையாளர், மாமன்ற உறுப்பினர் அல்லது அங்கீகரிக்கப் பட்ட ஒப்பந்ததாரர் மூலம் விண்ணப்பிக்கலாம். படிவம் 1-ல் உள்ள விண்ணப்பப் படிவத்துடன் ரூ.100 கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்க ளை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பொறியாளர் சான்று அவசியம். நிலத்தடி கழிவுநீர் அமைப்பானது பொதுப்பொறியாளர் அல்லது மாமன்ற உறுப்பினரால் சான்றளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்துடன் இடத்தின் அமைப்புத் திட்டம் (Site Plan), பொதுச் சுகாதாரத் துறை அல்லது நகராட்சி நிர்வாகத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சாக்கடை திட்டத்தின் நகல், நீர் இணைப்பு சான்று, வீட்டின் உரிமையாளரின் சம்மத கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். அத்துடன் பாதாள சாக்கடை ஒருமுறை இணைப்பு கட்டணம் சதுர அடி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: 600 சதுர அடிக்கு கீழ் ரூ. 7,500, 601-1200 சதுர அடி வரை ரூ. 12,500, 1,201-1,800 சதுர அடி வரை ரூ. 17,500, 1801-3,500 சதுர அடி வரை ரூ. 20 ஆயிரம், 3,501-5,000 சதுர அடி வரை ரூ. 25 ஆயிரம், 5,001-10,000 சதுர அடி வரை ரூ. 40 ஆயிரம், 10,001 சதுர அடிக்கு மேல் ரூ. 80 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற வணிக வளாகங்களுக்கான கட்டணங்கள் வேறுபடும்.
ஆண்டுதோறும் 5% உயர்த்தப்படும்: மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டணங்களை 5 சதவீதம் வரை உயர்த்தவும் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிலத்தடி கழிவுநீர் அமைப்பில் ஏதேனும் பழுதுகள், அடைப்புகள் ஏற்பட்டால், அதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், முறையற்ற கழிவுகளை க் கொட்டுவது மற்றும் அடைப்பை ஏற்படுத்துவது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். புதிய கழிவுநீர் இணைப்புகளுடன் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளையும் நிறுவ வேண்டும் என்ற விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகள் திருநெல்வேலி மாநகராட்சியின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கழிவுநீர் அமைப்பின் திறமையான நிர்வாகத்துக்கும் உதவும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதும், புதிய விதிமுறைகளும் சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.