புதுடெல்லி: பனாமா நாட்டில் மோடி அரசின் முடிவுகளை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டியிருப்பதற்கு அவரது கட்சியில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என்றாலும் சசி தரூர் அதனை கண்டுகொள்வதில்லை.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி சசி தரூர் இடம்பெற்றுள்ளார். அவர் பனாமா நாட்டில் பேசுகையில், “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஓசி) முதன்முறையாக கடந்து சென்று தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் நாம் இவ்வாறு தாக்குதல் நடத்தியதில்லை.
2019 புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நாம் சர்வதேச எல்லையை (ஐபி) கடந்து சென்றோம். தற்போது இரு எல்லைகளையும் கடந்து சென்று பஞ்சாபின் இதயப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளோம்” என்றார். இது காங்கிரஸ் கட்சியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனம்: இந்நிலையில் கடந்த 2018-ல் சசி தரூர் தனது ‘தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து எழுதியிருப்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.