2025 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று (மே 30) நியூ சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜானி பேரிஸ்டோவ் களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டை இழக்க 84 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடி வந்த பேரிஸ்டோவ் அரை சதம் விளாச தவறினார். 22 பந்துகளில் 47 ரன்கள் அடித்து வெளியேறினார்.
அதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். சதத்தை நெருங்கி சென்ற நிலையில், பிரஷித் கிருஷ்ணா பந்து வீச்சில் 81 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் திலக் வர்மா 25, ஹர்திக் பாண்டியா 22 ரன்களும் எடுத்தனர். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த குசால் மண்டிஸ் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், ஹிட் விக்கெட் ஆனார். அதாவது அவரே காலை வைத்து ஸ்டம்ப்பை தட்டிவிட்டார். இதனால் 20 ரன்களில் வெளியேறினார்.
ஆனால் மண்டிஸ்-க்கு பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினார். சாய் சுதர்சன் அரைசதம் கடந்தார். ஓவருக்கு 10 ரன்களை அடித்துக்கொண்டே வந்தனர். வாஷிங்டன் சுந்தர், போல்ட் வீசிய 13வது ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து அதிரடி காட்டினார். 48 ரன்கள் எடுத்த அவர் அடுத்த ஓவரிலேயே பும்ரா வீசிய யாக்கர் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அவரை தொடர்ந்து சாய் சுதர்சன் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. ரூதர்ஃபோர்ட் மற்றும் திவாட்டியா அதிரடி காட்டினர். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 36 ரன்கள் அடிக்க வேண்டி இருந்தது. போல்ட் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் ரூதர்ஃபோர்ட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷாரூக் கான் வந்தார். ஆனால், இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது. மேலும், குஜராத் அணி தோல்வி அடைந்ததால், தொடரை விட்டு வெளியேறியது.
மேலும் படிங்க: சேப்பாக்கில் சிஎஸ்கேவை வீழ்த்தியது முதல் பிளே ஆஃப் வரை: 2025ல் ஆர்சிபி படைத்த சாதனைகள்!
மேலும் படிங்க: ஃபில் சால்ட் to வீரேந்திர சேவாக் வரை: ஐபிஎல்லில் வேகமாக 1000 ரன்களை எட்டிய டாப் 5 வீரர்கள்!