புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசில் வங்கி மோசடிகள் 416 சதவீதம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மோடி அரசின் 11 ஆண்டுகளில் ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளன, இது 416% அதிகரிப்பு ஆகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், கடந்த 6 ஆண்டுகளில் ரூ.500 போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 291% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அது மேலும் அதிகமாகும். மோடி ஜி, உங்கள் நரம்புகளில் என்ன பாய்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், உங்கள் அரசின் நரம்புகளில் மோசடி மற்றும் போலித்தனம் பாய்கிறது என்பது உறுதி” என்று தெரிவித்துள்ளார்
முன்னதாக, மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்ட மற்றொரு பதிவில், “மோடி அரசு தனது மொத்த தோல்விகளை மறைக்க பொருளாதாரம் குறித்து பொய்களைப் பரப்புவதை ஒரு பழக்கமாக்கியுள்ளது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக, இந்த திறமையற்ற அரசு, பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் அழித்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.