ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்

மாஸ்கோ: ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் மாஸ்கோ உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பெர்ம் நகரில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச சமூக மற்றும் அரசியல் மாநாட்டில் உரையாற்றிய செர்ஜி லாவ்ரோவ், “முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமகோவின் முன்முயற்சியின் பேரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய முக்கூட்டின் வடிவமைப்புக்குள் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்குவதில் நாங்கள் உண்மையான ஆர்வத்தைக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

வெளியுறவுக் கொள்கைத் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல், மூன்று நாடுகளின் பிற பொருளாதார, வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எல்லையில் நிலைமையை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது ஒரு புரிதல் எட்டப்பட்டுள்ளது. இந்த ஆர்ஐசி முக்கூட்டை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்தியாவை சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இறக்க நேட்டோ வெளிப்படையாக முயற்சிக்கிறது. நமது இந்திய நண்பர்கள், அவர்களுடன் நடத்திய ரகசிய உரையாடல்களின் அடிப்படையில் நான் இதைச் சொல்கிறேன். உண்மையில் ஒரு பெரிய ஆத்திரமூட்டலாகக் கருதக்கூடிய இந்தப் போக்கை வெளிப்படையாகச் செய்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்று தெரிவித்தார்.

ரஷ்யா, இந்தியா, சீனா கூட்டமைப்பு கல்வான் நெருக்கடிக்குப் பிறகு ஜூன் 2020-இல் முடக்கப்பட்டது. எனினும், 2024 அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.