90களின் தொடக்கத்தில் நடக்கும் கதையில் ஊரில் நன்மதிப்புடையவராக இருக்கிறார் செல்லையா (பிரபு). தன் மகன் பட்ட முத்துவை (வெற்றி) அதீத பாசத்துடன் வளர்க்கிறார். ஒரு காலத்தில் இருந்த குடும்ப சொத்துகள் எல்லாம் விவசாயம் பொய்த்ததால் கரைந்துவிட, பட்ட முத்து தன் தந்தைக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை யாருக்கும் தெரியாமல் ஊரிலிருக்கும் சொந்தக்காரர்களிடம் கொண்டு சேர்க்கும் சட்டவிரோத செயலை (வரியைத் தவிர்க்க) செய்யும் லிங்காவிடம் (கோமல் குமார்) பணிக்குச் சேர்கிறார். அங்கு நடக்கும் ஒரு பிரச்னையால் வெற்றியின் வாழ்க்கையில் பெரியதொரு சிக்கல் ஏற்படுகிறது. அதை அவர் சமாளித்தாரா, அப்பா – மகன் பாசம் என்னவானது என்பதைச் சொல்கிறது அறிமுக இயக்குநர் மகா கந்தன் இயக்கியிருக்கும் ‘ராஜபுத்திரன்’.

தன் கதைத் தேர்வுகளால் கவனிக்க வைக்கும் வெற்றி, இந்த முறை முழுக்க முழுக்க கமெர்ஷியல் ரூட்டில் களமிறங்கியிருக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளில் பாஸாகிறவர் மற்ற பாக்ஸ்களை டிக்கடிக்க சிரமப்படுகிறார். அப்பா – மகன் பாசம், காதலியுடனான ரொமான்ஸ் டிராக் என இரண்டு எமோஷனல் ஏரியாக்களிலும் தடுமாற்றமே! பாசமிகு தந்தையாக பிரபு, கணீர் குரல், அதிரடி சண்டை என ஸ்கோர் செய்கிறார். ஆனால் வெற்றி தடுமாறும் எமோஷனல் ஏரியாவில் ஓவர்டோஸாக பங்காற்றி அயர்ச்சியும் ஊட்டுகிறார். நாயகியாக கிருஷ்ண பிரியா, காதல் காட்சிகளில் நல்லதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார்.
காமெடிக்கு என சேர்க்கப்பட்ட தங்கதுரை, இமான் அண்ணாச்சி இருவரும் சிரிக்க வைக்கவே சிரமப்படுகின்றனர். பிரதான வில்லனாக கோமல் குமாருக்கு நாயகனைவிடவும் ஏகப்பட்ட பில்டப் காட்சிகள். சில இடங்களில் அவரின் நடிப்பு ஸ்பூஃப் ரகமாகவும் மாறிப்போவது எதிர்பாராத லகலக! உபவில்லன்களாக லிவிங்ஸ்டன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான். இவர்களில் லிவிங்ஸ்டனின் பாத்திரம் மட்டும் சற்றே ஆறுதலாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதையும் துருத்திக் கொண்டு தெரியும் ஒட்டு மீசை மூலமாக காலி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி வெயில் பூமியை அதற்கேற்ற தாக்கத்துடன் திரையில் ஏற்றியிருக்கிறார். ராகேஷ் ராக்கியின் சண்டைக் காட்சிகளுக்குப் பக்கபலமாக நிற்கிறது கமலக்கண்ணனின் படத்தொகுப்பு. வில்லன் கூடாரம், சந்தை செட்டப், அந்தக் கால பேருந்து, வீடுகள் எனக் கலை இயக்குநர் அய்யப்பனின் உழைப்பு பாராட்டத்தக்கது. நௌஃபல் ராஜா இசையில் ‘ஆகாசத்த தொட்டாச்சி’ பாடல் ஆறுதல். மற்றபடி பின்னணி இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அப்பா – மகன் பாசக்கதையை நான்கு சண்டைகள், இரண்டு பாடல்கள், காதல் காட்சிகள் என வைத்து ஜனரஞ்சக சினிமாவாகக் காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், பெரும்பாலான காட்சிகள் பார்த்துச் சலித்த டெம்ப்ளேட்களாகவும், சோதிக்கும் வகையறாக்களாகவும் இருப்பது ஏமாற்றமே! வெள்ளந்தி கிராம மனிதர்களை ஏமாற்றும் வில்லன் கேங், அதைத் தொடர்ந்து வரும் இறுதி ட்விஸ்ட் ஓகே ரகம் என்றாலும் யாருமே இந்த எளிய மோசடி குறித்து யோசிக்காமல் இருப்பது என்ன லாஜிக்கோ! உண்மை என்ன என்பதை ஆரம்பத்திலேயே நெருங்கிவிட்ட பிரபுவும் அதன் பிறகு க்ளைமாக்ஸ் வரை அதைக் கண்டுகொள்ளாமல் போனது ஏன் என்பதும் புரியாத புதிரே! என்னதான் 90களின் தொடக்கத்தில் நடக்கும் கதை என்றாலும் பாத்திர வார்ப்புகளில் இவ்வளவு அப்பாவித்தனம் ஆகாது சாரே!

லாஜிக் பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால்கூட, கள்ளுக்கடை கவர்ச்சிப் பாடல், வழக்கொழிந்துபோன காதல் காட்சிகள், அபத்தமான உருவக்கேலி காமெடிகள் எனச் சுவாரஸ்யமற்ற தொகுப்பாகவே நகர்கிறது படம்.
பாசக்கதையில் அதீத செயற்கைத்தனமும், புதிதாக எதுவுமில்லாத எழுத்தும் ஏமாற்றம் தருவதால் ஒரு முழுமையான திரை அனுபவமாக மாறவே தடுமாறுகிறான் இந்த ‘ராஜபுத்திரன்’.