UPI Rules: அங்காடிகளில் பொருட்களை வாங்கவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணத்தை அனுப்பவும் அடிக்கடி UPI -ஐ பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
NPCI: இந்திய தேசிய கட்டணக் கழகம்
இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அனைத்து வங்கிகள் மற்றும் கட்டணச் செயலிகளுக்கும் புதிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுக (API) பயன்பாட்டு விதிகளை வெளியிடும். இதன் காரணமாக நடைமுறை செயலாக்கத்தில் பல மாற்றங்க ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாற்றங்கள் UPI அமைப்பை மிகவும் பாதுகாப்பானதாகவும் திறமையாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனினும், இதன் காரணமாக பயனர்கள் சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
UPI செயல்முறையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்:
Balance checks: இருப்புச் சரிபார்ப்புக்கு, ஒரு பயன்பாட்டிற்கு 50 முறை என வரையறை
பயனர்கள் ஒவ்வொரு UPI செயலியிலும் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும். பயனர்கள் இரண்டு செயலிகளைப் பயன்படுத்தினால், ஒவ்வொன்றிலும் 50 இருப்புச் சரிபார்ப்புகளைப் பெறுவார்கள்.
Transaction status checks: பரிவர்த்தனை நிலைச் சரிபார்ப்புகள்
பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் (PSPகள்) ஒரு பரிவர்த்தனை வெற்றிகரமாக நடந்ததா என்பதைச் சரிபார்க்க APIகள் அனுமதிக்கின்றன. புதிய வழிகாட்டுதல்களின் கீழ், PSPகள் ஒரு குறிப்பிட்ட கால தாமதத்திற்குப் பிறகுதான் பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்க வேண்டும்.
Account List Access Limited: கணக்குப் பட்டியலை அணுகுவதற்கான வரம்பு 25 முறை மட்டுமே
பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் எந்த வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஒரு நாளைக்கு ஒரு செயலிக்கு 25 முறை மட்டுமே செக் செய்ய முடியும். பயனர் தங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்தக் கோரிக்கை செயல்படும்.
வங்கிகள் மற்றும் செயலிகள் இணங்க வேண்டும்
Paytm, PhonePe மற்றும் இது போன்ற அனைத்து வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்கள் (PSPகள்) API பயன்பாட்டைக் கண்காணிக்க NPCI உத்தரவிட்டுள்ளது. மீறுபவர்கள் அபராதங்கள், பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அல்லது புதிய பயனர்களை சேர்ப்பதற்கான தடையையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
அனைத்து PSP -களும் ஆகஸ்ட் 31, 2025 க்குள் ஒரு கணினி தணிக்கை உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வரம்புகள் கணினி நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்று NPCI கூறுகிறது.