அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு: ஊடக குற்றச்சாட்டுக்கு எலான் மஸ்க் மறுப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் பணியாற்றிய காலத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார் என்ற ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் குற்றசாட்டினை உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் மறுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அரசு செயல்திறன் துறையில் தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க் பணியாற்றிய காலத்தில் அவரிடம் அடிக்கடி போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஒழுங்கற்ற நடத்தை இருந்ததாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தியைக்காட்டி தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்தக் கட்டுரையில், ‘எலான் மஸ்க் கேட்டமைன், எக்ஸ்டசி போதை வஸ்துக்கள் மற்றும் சைக்டெலிக் காளான்களை உட்கொண்டார். அது அவரின் அரசுப் பணி குறித்து கேள்விகளை தூண்டியது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் தனது பணிநிறைவு நாளில் பேசிய மஸ்க், பத்திரிகையின் மீது குற்றம்சாட்டி பிரச்சினையை திசைதிருப்பினார்.

ஃபாக்ஸ் செய்திகளின் பீட்டர் டூகி, நியூயார்க் டைம்ஸ் செய்தி பற்றி மஸ்கிடம் கேட்ட போது, “ரஷ்யா -கேட் பற்றி பொய்யான செய்தி வெளியிட்டு புலிட்சர் பரிசு வாங்கிய அதே நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையா? அதே நிறுவனமா? நான் அப்படிதான் நினைக்கிறேன். ரஷ்யா – கேட் பற்றிய பொய்யான செய்தி வெளியிட்டதற்காக நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக நீதிபதி தீர்ப்பளித்தார். அவர்கள் தங்களின் புலிட்சர் பரிசைத் திருப்பித் தரக் கேட்டிருக்கலாம். நாம் வேறு பேசலாம்.” என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

இதனிடையே, வெள்ளை மாளிகையின் பணியாளர்களின் துணைத்தலைவர் ஸ்டீபன் மில்லரிடம், மஸ்க்கின் போதைப் பொருள் பயன்பாடு குறித்து கேட்கையில் அவர், “தெற்கு எல்லையில் கொட்டப்படும் போதைப் பொருள்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். அடுத்த கேள்வி.” என்று மஸ்க் குறித்த கேள்வியைத் தவிர்த்தார்.

நியூயார்க் டைம்ஸ் செய்தி சொன்னது என்ன?: கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பத்திரிகையாளர் டான் லெமனுக்கு எலான் மஸ்க் அளித்த பேட்டியில், அவர் சிறிய அளவில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கேட்டமைன் எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருந்தார். “நீங்கள் அதிகமாக கேட்டமைன் எடுத்துக்கொண்டால் உங்களால் அதிகமாக வேலை செய்ய முடியாது. நான் அதிமான வேலைகள் செய்கிறேன்” என்று மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் தகவல் அறிந்தவர்கள் அவர் அடிக்கடி, சில நேரங்களில் தினமும் கேட்டமைன் எடுத்துக்கொண்டார். அது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுத்தது என்கின்றனர்.

அறிக்கைகளின் படி, எலான் மஸ்க் தினசரி அட்ரல் உட்பட 20 மாத்திரைகள் எடுத்துக்கொண்டார். அது அரசு பணியில் அவர் இருந்த காலத்தில் அவரின் உடல் மற்றும் மனநிலை பாதிப்புக்கள் குறித்த கேள்வியை எழுப்பின.

ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்கின் செல்வாக்கு வளர்ந்தநிலையில், அவரின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் அதிகரித்தன. அவர் அமைச்சரவை உறுப்பினர்களை அவமதித்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் பேரணி ஒன்றின் போது நாஜி வணக்கம் போன்ற செய்கை ஒன்றை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிறப்பு அரசு ஊழியர் என்று வகைப்படுத்தப்பட்டிருந்த எலான் மஸ்க்கிற்கு போதைப் பொருள் பயன்பாடு குறித்த அரசின் பல நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.