“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது” – சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு

புவனேஸ்வர்: ‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று ஒடிசாவின் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த சகிகோபாலிலிருந்து ‘விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்’ திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் பிரச்சாரம் மே 29 முதல் ஜூன் 12 வரை 15 நாட்களுக்கு 20 மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்படும். 731 வேளாண் அறிவியல் மையங்கள், 113 ஐசிஏஆர் நிறுவனங்கள், மாநில அளவிலான துறைகள் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், “நமது விஞ்ஞானிகளை நான் வாழ்த்துகிறேன். இனிமேல், ​​டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இந்த வளர்ச்சியானது பிரதமர் மோடியின் கொள்கை மாற்றங்கள், அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பின் விளைவாக கிடைத்தது” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சி தொடக்க விழாவில் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி, “நமது நாட்டில் விவசாயம் பாரம்பரியமாக மாநிலப் பட்டியலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த விவசாயக் கொள்கைகளை வகுத்து, அதன் விவசாயிகளின் நலனுக்காக நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் இன்றைய வேகமாக மாறிவரும் காலகட்டத்தில், இந்திய விவசாயத்தில் விரிவான சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

விவசாயிகள் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் விவசாய முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஓர் எளிய முயற்சி இது. இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதே இதன் குறிக்கோள். அதற்காக, இந்த பிரச்சாரம் விவசாயிகளுடன் நேரடி விவாதங்களைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் கீழ், எங்கள் விஞ்ஞானிகள் குழுக்கள் “நிலத்திலேயே ஆய்வகம்” என்ற கருத்தை ஒரு பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்கின்றன. அவர்கள் தரவுகளுடன் நவீன விவசாய அறிவை விவசாயிகளுக்கு வழங்குவார்கள். விக்சித் க்ரிஷி சங்கல்ப் அபியான்’ நமது ‘அன்னதாதாக்களுக்கு’ (உணவு வழங்குநர்கள்) முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளைத் திறக்கும்” என்று அவர் கூறினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.