இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்துக்காக ஜப்பானில் சோதனை ஓட்டம் தொடக்கம்

இந்தியாவுக்கான புல்லட் ரயில்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புல்லட் ரயில்களின் சோதனை ஓட்டம் ஜப்பானில் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பை, குஜராத்தின் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புல்லட் ரயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும். மும்பை, அகமதாபாத் இடையே மொத்தமுள்ள 508 கி.மீ. தொலைவுக்கு அதிநவீன தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் 12 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்போதைய நிலையில் 71 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2030-ம் ஆண்டில் மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலவசமாக 2 புல்லட் ரயில்கள்: ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவுடனான நட்புறவை கருத்தில் கொண்டு ஜப்பான் சார்பில் 2 புல்லட் ரயில்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த சூழலில் இந்தியாவுக்கான 2 சின்கான்சென் ரக புல்லட் ரயில்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில்களின் சோதனை ஓட்டம் ஜப்பானின் சென்டாய் நகரில் தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஜப்பானிய அதிகாரிகள் கூறும்போது, “இந்தியாவுக்காக 2 புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிக வெப்பம் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு கடுமையான வெயிலை சமாளிக்கும் வகையில் புல்லட் ரயில்களை தயார் செய்துள்ளோம். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு சரக்கு கப்பல் மூலம் இரு புல்லட் ரயில்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தன.

இந்திய ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: மும்பை- அகமதாபாத் இடையே இப்போது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மும்பையில் இருந்து 5.30 மணி நேரத்தில் அகமதாபாத்தை சென்றடைகிறது. இந்தியாவுக்காக ஜப்பானில் தயாரிக்கப்பட்டு உள்ள புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. இந்த புல்லட் ரயில் மூலம் மும்பையில் இருந்து 3 மணி நேரத்தில் அகமதாபாத்தை சென்றடைய முடியும். வரும் 2026-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

புல்லட் ரயில் திட்டம் மற்றும் புல்லட் ரயில்களை இயக்குவது தொடர்பாக பயிற்சி பெற இந்திய குழு ஜப்பான் சென்றுள்ளனர். இந்த குழுவினருக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மும்பை- அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவு உள்ளது. இதில் குஜராத்தில் 348 கி.மீ. தொலைவுக்கும் மகாராஷ்டிராவில் 156 கி.மீ. தொலைவுக்கும் தண்டவாளம் அமைக்கப்படுகிறது. 21 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடலுக்கு அடியில் 7 கி.மீ. தொலைவு, மலையை குடைந்து 5 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மும்பை, தாணே, விரார், பொய்சர், வாபி, பிலிமோரா, சூரத், பரூச், வடோதரா, ஆனந்த், அகமதாபாத், சபர்மதி ஆகிய 12 இடங்களில் சர்வதேச தரத்தில் ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயரும். இவ்வாறு இந்திய ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.