நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது. கடந்த மே 26-ம் தேதி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,010 ஆக இருந்தது. இது 30-ம் தேதி 2,710 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் கூறுகிறது.
கரோனா தொற்று பரவலில் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. அதிகபட்சமாக கேரளாவில்1,147 பேர், மகாராஷ்டிராவில் 424, டெல்லியில் 294 , குஜராத்தில் 223, தமிழ்நாட்டில் 148 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பஞ்சாபைச் சேர்ந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் மூத்த குடிமக்கள் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இப்போது பரவி வரும் கரோனா தொற்று லேசானதுதான் என்றும் இதுபற்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.